Thursday, July 24, 2014

ரெங்கசுப்ரமணி விமர்சனம்

அதிகாலையிலேயே முழிப்பு வந்த பண்டாரத்திற்கு நிலைகொள்ளாமல் தவிக்கின்றார். அவரது சினைகண்ட மாட்டை நினைத்து. எப்போது பிரசவமாகும், காவலுக்கு ஆளிருந்தும் ஒரு முறை ஒரு குட்டியை நரி கொண்டு போய்விட்டது என்று பயந்து கொண்டிருக்கின்றார். மனைவி தான் பிரசவிக்கும் போது கூட இப்படி இல்லை, இப்போது என்ன இவ்வளவு தவிப்பு என்று அலுத்துக் கொள்கின்றாள். அவர் அவசர அவசரமாக அவரது மாட்டை காண போகின்றார். இப்படி நினைத்துக் கொண்டுதான் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு கையும் காலும் கண்ணும் இல்லாத முத்தம்மைதான் பிரசவிக்க போகின்றாள் என்பதில் ஆரம்பித்த அதிர்ச்சி கடைசிவரை போகவில்லை.


பெரிய கோவில்கள், தெருக்கள், பஸ் ஸ்டாண்ட் என்று பல இடங்களில் நாம் பார்க்கும் பிச்சைக்காரர்கள் பின்னால் இப்படி ஒரு மிகப்பெரிய வலை இருக்கும் என்பதும், இது ஒரு மிகப்பெரிய தொழில் என்றும் இதைப் படிக்கும் முன் வரை தெரியாது. நான் கடவுள் படத்திற்கு பின் இதை வாங்கினேன். அதில் காட்டியது இப்புத்தகத்தில் உள்ளதில் ஒரு பத்து சதவீதம் கூட இருக்காது.

பண்டாரம் ஒரு மிகப் பெரிய முருக பக்தர். அவர் மனைவி, குழந்தைகளிடம் பாசமாக இருக்கும் ஒரு குடும்பத்தலைவர். பெண் அழுவதால் நடு இரவில் ஓடிப் போய வளவி செய்து போடும் பாசமுள்ள தகப்பன். ஆனால் அவரது மறுபக்கம் பிச்சைக்காரர்களை வைத்து சம்பாதிக்கும் தொழில்.



அவர்களை வைத்து பிழைப்பதில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லை அவருக்கு. அவரை பொறுத்த வரை அந்த ஆத்மாக்கள் அப்படித்தான் இருக்க விதிக்கப்பட்டவர்கள். "நம்ம யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணல" என்பதை அவர்களால் மனதார சொல்ல முடிகின்றது.

பண்டாரத்தை பொருத்தவரை அவர்கள் மனிதர்கள் அல்ல, அவர்கள் அனைவரும் அவருக்கு உருப்படிதான். அவரிடன் வேலைபார்ப்பவர்களுக்கும் அதே போலத்தான், உருவம் குலைந்த பிச்சைக்காரர்களை ஒரு பிண்டமாகத்தான் பார்க்கின்றன்ர். அவர்களை மனிதர்கள் என்று கருதுவதில்லை. பிறந்து சில நாட்களே ஆன பிள்ளையை, தண்ணீர் ஊற்றி வெயிலில் போடச் சொல்கின்றார். டெம்போவில் அனைவரை அடுக்கி, மலத்திற்கு நடுவில் ஊறி கிடக்கும் அவர்களை பழனிக்கு கடத்துகின்றார். பொருள் போல வாங்கி விற்பதும், பண்ட மாற்றும் செய்கின்றார். நல்ல விலைகிடைக்கும் என்று மனித உடலை கூறு போட்டு விற்கவும் துணை போகின்றார்.அதே பண்டாரம் கடத்தப்பட்டு ஊனமாக்கப்பட்டவர்களை பார்த்து பயப்படுகின்றார், அது பாவம் என்ற எண்ணம் அவருக்கு வருகின்றது.  அவர்களை வைத்து தொழில் செய்ய மனம் வருவதில்லை. 

//நாம நம்மள்விட சின்ன ஆத்மாக்கள சம்ரக்‌ஷிக்கனும். ஆடு, மாடு கோழி வளர்க்குதோம், நம்மள விட சின்ன ஆத்மாக்கள் //

பழனிக்கு சென்று சீசன் முடியும்வரை வேறு பண்டாரமாக ஷோக்காக இருக்கும் பண்டாரத்திற்கும் சிறிய புள்ளி வைக்கப்படுகின்றது. "எயிட்சுன்னு புது நோய் வருதாம் ஜாக்கிரதை" வரலாம், வராமலும் போகலாம். அதை எல்லாம் கதை பேசுவதில்லை.

அவருடன் தொழில் நடத்து தோழருக்கும் பிச்சைக்காரர்கள் உருப்படியல்ல, அவர்களும் தோழர்களே, சகாவு. சகாவுவை வாங்கி விற்பதற்கும் அவரிடன் வாதம் தயாராக உள்ளது. கடவுள் பக்தியோ, வர்க்க சிந்தாந்தமோ எதுவும் அக்குறைப்பிறவிகளை மனிதர்களாக மதிப்பதில்லை.

ஆனால் அப்பிச்சைக்காரர்கள் அவ்விதம் நினைப்பதில்லை. அவர்களுக்குள்ளே ஒரு வாழ்க்கையை, நமக்கு விதிக்கப்பட்டது இது, இதிலும் சந்தோஷமாக இருப்போம் என்று வாழ்கின்றனர். சின்ன சின்ன விஷயங்களில் அவர்களின் சந்தோஷத்தை அடைகின்றனர். முத்தம்மை அவளைப் போலவே இருக்கும் அவளின் பிள்ளையை பார்த்து சந்தோஷப் படுகின்றாள். முத்தம்மைக்கு பிறந்த அத்தனையும் குறை பிறவிகள், இருந்தும் அவளுக்கு அவள் குழந்தை பியேக்காரன், ராஜா, ரஜினிகாந்து. அவள் அக்குழந்தைக்கு தகப்பனிடம் வெட்கம், பெருமிதம், பரிதாபம் என அனைத்தும் கலந்து பேசும் தருணங்கள், மிகவும் நெகிழ்வானவை.

குய்யானுக்கு உணவும், ராமப்பனுக்கு பீடியும்.ராமப்பனும் குய்யானும் அவர்களுக்கு கிடைக்காத விஷயங்களை பற்றி பேசி பேசி அதில் சந்தோஷப்படுகின்றனர்.

தப்பிக்க ஒரு கயிறைக் கட்டும் பெருமாளை கணவனாக நினைத்து, அவனிடம் உரிமை கொண்டாடும் கால் இல்லாத எருக்கு. அவளை சந்தோஷமாக வைத்திருப்பது ஒரு காதல்.  முத்தம்மையும் எருக்கும் குழந்தையை பற்றியும், அது தாய்க்கு தரும் உணர்ச்சியை பற்றியும் பேசுகின்றனர்.

அவர்களின் கடவுள் நாம் கும்பிடும் முருகனோ, சிவனோ, பெருமாளோ இல்லை. அவர்களுக்கு அவர்கள் தேவையில்லை. நமது கடவுள்களுக்கு அவர்கள் உலகில் வேலை இல்லை. அவர்களின் கடவுள் மாங்காண்டி சாமி. அதுவும் ஒரு பிச்சைக்கார சாமி, பிச்சைக்காரர்களுக்கு கடவுளாக இருக்கும் மாங்காண்டி சாமிக்கு, பணக்காரர்களுக்கு சாமியாக இருக்க இஷ்டமில்லை. அப்பிச்சைக்காரர்கள் உலகத்தில் கடவுளுக்கு இடமில்லை.

பண்டாரத்திற்கும் அவரது பிச்சைக்காரர்களுக்குமான உறவு, சாதரண முதலாளி தொழிலாளி உறவு போல, முதலாளி மகள் திருமண பிரச்சினையை கேட்டு வருத்தப்படுகின்றார்கள், அவருக்கு யோசனை சொல்கின்றார்கள். அவர்களுக்கு பண்டாரத்தின் மீது எங்கும் கோபம் வருவதில்லை.

கதையில் வரும் மற்ற பாத்திரங்கள், முத்தமையை முழுவதுமாக பார்க்க விரும்பும் போத்தி, வார்த்தைகள் முழுவதும் விஷம் வைத்திருக்கும் பக்கத்து வீட்டு கிழவி, ராட்சசத்தின் உருவமான பண்டாரத்தின் சம்பந்தி, 11 தோசை சாப்பிடும் ப்ரோக்கர் அனைத்தும் கச்சிதம்.

இது போன்ற ஒரு தொழில் எப்படி அரசின் கண்ணில் படாமல் உள்ளது என்பதற்கான பதிலும் இதிலேயே உள்ளது. கால் இல்லாத எருக்கை தூக்கி சென்று பயன்படுத்திக் கொள்ளும் போலிஸ்காரன், ஒரு உருப்படிக்கு இவ்வளவு என்று கமிஷன் பேசும் இன்ஸ்பெக்டர் என்று தொழிலின் சக பங்குதாரர்களையும் காட்டுகின்றது.


ஜெயமோகன் எப்படி இந்த உலகத்தை பார்த்து எழுதினார் என்பது வியப்புதான். அவரின் எழுத்தில் அவ்வுலகத்தின் மூர்க்கம் நம்மை தாக்குகின்றது. அம்மனிதர்களின் சதைகளிலிருந்து வரும் சீழும் ரத்தமும் அவரின் எழுத்துகள் மூலம் நம் மீது தெறிக்கின்றது. ஒரு சில இடங்களில் நாம் எவ்வளவும் புண்ணியம் செய்தவர்கள் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.


கடைசியில் முத்தம்மை வேண்டாம் உடையாரே இவன் ஒத்த விரலோன் என்று கதறுவது முதல் முறை படித்த போது சரியாக புரியவில்லை. அடுத்த முறை படித்த போது அந்த வரிகள் பலமாக தாக்கிவிட்டது. அதே சமயம் அங்கே குய்யான் முகத்தில் வரும் சிரிப்பு கதையை முடித்து வைக்கின்றது. அவனின் சிரிப்புதான் கதையின் உச்சகட்டம்.

உரையாடல்களின் வேகம், சின்ன வசனமானாலும் அதன் அதிர்ச்சி பலமாக உள்ளது. மற்றுமொன்று நகைச்சுவை, இம்மாதிரி கதைகளில் நகைச்சுவை எப்படி என்று யோசிக்கலாம், பிச்சைக்காரர்களின் பேச்சில் இருப்பது. வேறு எப்படி அவர்களின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள முடியும். ப்ளாக் ஹூயூமர் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த எனக்கு அது இதுதான் என்று காட்டிவிட்டது.

முதலில் அந்த தமிழ் கொஞ்சம் தலைவலியை தந்தாலும் பழகிவிட்டது. அதோடு பிடித்தும் விட்டது. அந்த டிக்‌ஷனரியை அந்தந்த பக்கத்திலேயே போட்டிருக்கலாம். நீக்கம்பு என்றால் முதலில் படிப்பவனுக்கு என்ன புரியும்.

கதையின் அடிநாதமாக நான் பார்ப்பது மனிதம் / மனிதத்தன்மை. மனிதர்கள் முழுக்க முழுக்க நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ இருக்க முடியாது. தர்ம தேவதையின் அம்சமான யுதிர்ஷ்டிரன் மீது கூட கறை உள்ளது. அதே போல் மனிதர்களின் அடிப்படை அம்சம், வாழ்க்கையை வாழ்வது. எப்படி இருந்தாலும் அதில் அவர்களின் மகிழ்ச்சியை தேடி வாழ்வது.

கதை மேலோட்டமாக பார்த்தால் ஒரு குரூரமான உலகை காட்டுவது போல தோன்றலாம், ஆனால் கதையில் உள்ளே ஓடுவது மனிதனின் வாழ்க்கையை பற்றிய உணர்ச்சி. பாரதக் கதை ஒன்று மேலே புலி, கீழே பாதாளம், அருகே பாம்பு இருந்தும் தேனை ருசிக்கும் மனம். அது வேறு உதாரணத்திற்கு கூறப்பட்டாலும், அதை எனக்கு இங்கே பொருத்தி பார்க்க தோன்றுகின்றது. மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் அவனது அடிப்படை உணர்ச்சிகள் மாறாது, அவனின் வாழ்க்கையை அவை ஒரு அர்த்தமுள்ளதாக மாற்ற செய்யும்

No comments:

Post a Comment