Tuesday, November 24, 2015

குக்குறுவான், ராஜன் விமர்சனக்கடிதங்கள்



அன்புள்ள ஜெ

எழுதவேண்டும் என நினைத்து நீண்டகாலமாகத் தவிர்த்துவந்தபின் இப்போது எழுதுகிறேன். இன்று மீண்டும் ஏழாம் உலகத்தை வாசித்து முடித்தேன். ஒரு பாவமன்னிப்பு சங்கீர்த்தனம் போன்ற நாவல் என்று சொல்வேன். வாழ்க்கைக்கும் கீழே உள்ள மக்கள். ஆனால் அங்கும் உள்ள அன்பும் பாசமும் தன்மதிப்பும்

நகைச்சுவையைப்பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. அகமது ‘வெறும் முப்பதுகோடி ரூவா’ என்று சொல்லுமிடத்தில் வெடித்துச்சிரித்தேன். ‘நிரபராதியாக்கும்’ என்று குய்யன் சொல்லுமிடமும் அப்படியே. ஆனால் பின்னர் யோசித்துப்பார்த்தபோது அவை எவ்வளவு ஆழமான அங்கதம் என்று தெரிந்தது

ஆனால் இந்நாவலை மீண்டும் வாசிக்கும்போது வரும் எண்ணம் இதிலுள்ள மிகவும் நுட்பமான சில இடங்கள். பனிவிழும் மலர்வனம் என்ற பாட்டு ஏன் வருகிறது. போத்திவேலுப்பண்டாரம் ஏன் வானத்தைப்பார்க்கிறார்?

அவற்றை தொட்டு வாசிக்கும்போது நாவல் மேலும் விரிவடைகிறது என நினைக்கிறேன்

ராஜன் கருணாகரன்



அன்புடன் ஆசானுக்கு,

இந்த மின்னஞ்சலுக்கு உளஎழுச்சி மட்டுமே காரணம். இப்போது ஏழாம் உலகம் படித்து முடித்தேன்.

முத்தம்மையை அவளின் மகனே புணர , வேண்டாம் என அலறும் கணம் உறுத்தி கொண்டே இருக்கிறது. ஒரு ஆள் போககூடிய குழாயில்,ஊர்ந்து போகும் போது ,முகம் இருக்கும் திசையில் நீர் நிரம்ப , எதுவும் செய்ய முடியாமல் ,திணறி இறப்பதை போல அந்த கணம் .

இது கடைசியில் தோன்றியது, மாங்கண்டி சாமி "உங்களை பிரிந்திருக்க முடியாது " என பொருள்பட , கண்கள் நெருப்பாய் ஒளிர, பாடும் போது, அது நீங்கள்தான் என்றும் , மாங்கண்டி சாமி கையும் ,காலும் இல்லாத கதாபாத்திரமாக சித்தரிக்கபட்டதின் அர்த்தம் புரிந்ததாகவும் தோன்றியது.

ஆனால் , மாங்கண்டி சாமியின்  மாறபுன்னகை , கிருஷ்ணனிடம் இருப்பது போல, அது ஏதோ செய்கிறது. அங்கே நிற்க ,அவர்கள் எத்தனை தூரம் பயனித்திருப்பார்கள் ?

அன்புடன்,
குக்குருவான்
 

No comments:

Post a Comment